புதுடெல்லி: நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்பதற்கு முன்னர் தனது வீட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேநீர் விருந்து அளித்தார்.
மத்திய அமைச்சரவை பதவியேற்பதற்கு முன்னர், அதில் இடம்பெற உள்ளவர்களை சந்தித்துப் பேசுவதை 2014ஆம் ஆண்டு முதல் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். எனவே, ஞாயிற்றுக்கிழமை நடந்த தேநீர் விருந்தில் பங்கேற்றவர்கள் அமைச்சரவையில் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், மனோகர்லால் கட்டார், எல்.முருகன், குமாரசாமி, தர்மேந்திர பிரதான், பியூஷ் கோயல், சிராக் பஸ்வான், சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“அந்தச் சந்திப்பில் உரையாற்றிய மோடி, அனைவரும் அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்தி, திட்டங்களை செவ்வனே முடிக்க வேண்டிய காலத்தில் முடிக்க வேண்டும். அமைச்சராகப் பதவியேற்றதும் துறை ரீதியிலான பணிகளில் அதிகக் கவனம் செலுத்தி, முதல் 100 நாள்களில் செய்து முடிக்க வேண்டிய பணிகளை அமல்படுத்துங்கள்,” என்று கேட்டுக் கொண்டார்.

