புதுடெல்லி: பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்குட்பட்ட மாநிலங்களில் இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்படும் போக்கு விரிவடைந்து வருகிறது.
ஒடிசா மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. ஓடிசாவின் முதல்வராக மோகன் சரம் மஜி பதவி ஏற்றுள்ளார். பார்வதி, கே.வி.சிங் ஆகியோர் துணை முதல்வர்களாகியுள்ளனர்.
இதற்குமுன், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களிலும் இரண்டு துணை முதல்வர்கள் உள்ளனர். இரண்டு துணை முதல்வர்கள் அறிமுகமான பட்டியலில் ஐந்தாவதாக ஒடிசா மாநிலம் சேர்ந்துள்ளது.
இரண்டு துணை முதல்வர்கள் அமர்த்தப்படும் முறை முதன்முறையாக பாஜகவால் 2017ஆம் ஆண்டில் உத்தரப் பிரதேசத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இங்கு முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றிருந்தார். இவருக்கு இரண்டு துணை முதல்வராக பிரகேஷ் பாதக் மற்றும் கேசவ் பிரசாத் மவுரியா அமர்த்தப்பட்டனர். இதன் பின்னணியில் உபியின் முக்கிய சமூகங்கள் அனைத்திற்கும் வாய்ப்பளிப்பதே பாஜக உத்தியாக இருந்துள்ளது.
இதனால், பாஜக தாம் ஆட்சி அமைக்கும் இதர மாநிலங்களிலும் துணை முதல்வர் அமர்த்தலை கடைப்பிடிக்கத் துவங்கியது. எனினும், மகராஷ்டிராவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணி கட்சி கடந்த 2023ல் ஆட்சி அமைத்தது.
இதிலும் இரண்டு துணை முதல்வர்கள். ஆனால் அது கூட்டணிக் கட்சிகளுக்குப் பங்களிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது.

