திருவனந்தபுரம்: சிறுவனை மிரட்டி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு 56 வருடம் சிறைத் தண்டனை விதித்து கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருவனந்தபுரம் அருகே உள்ள போத்தன்கோடு பகுதியை சேர்ந்தவர் 60 வயதான அப்துல் ஜஃபார் ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் தனது வீட்டில் மாணவர்களுக்கு அரபி பாடம் சொல்லிக் கொடுத்து வந்தார்.
இவரிடம் 11 வயது மாணவன் ஒருவன் அரபு பாடம் படித்தான். கடந்த 2020ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2021 ஜனவரி வரை அந்தச் சிறுவனை மிரட்டி அப்துல் ஜஃபார் ஓரினச்சேர்கையில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்த விவகாரத்தை வெளியே யாரிடமாவது சொன்னால், கொன்று விடுவேன் என அப்துல் ஜஃபார் அந்தச் சிறுவனை மிரட்டியதாகவும் இதனால் தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடமும் அந்தச் சிறுவன் தெரிவிக்காமல் இருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த சிறுவனின் தம்பியையும் அரபி பாடம் படிப்பதற்கு அப்துல் ஜஃபாரிடம் அனுப்பி வைக்க பெற்றோர் தீர்மானித்து உள்ளனர். அதற்கு அந்த மாணவன் கடும் எதிர்ப்புத் தெரிவித்தான்.
இதற்கான காரணம் குறித்து அந்த மாணவனிடம் பெற்றோர் நடத்திய விசாரணையில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் போத்தன்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில்போக்சோ பிரிவில் வழக்குப்பதிந்து ஆசிரியர் அப்துல் ஜஃபாரை காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி, அந்த ஓய்வுப் பெற்ற ஆசிரியருக்கு 56 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும் ரூ.78 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
மேலும் பாலியல் கொடுமை செய்து வந்தவருக்கு எந்த கருணையும் காட்டவேண்டிய தேவை இல்லை என்று நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

