மும்பை: ஜூன் 21ஆம் தேதி அனைத்துலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்தியாவில் ஜூன் 19ஆம் தேதியன்று பல பொது இடங்களில் யோகா நிகழ்ச்சிகளை நடத்தவும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மும்பையைச் சேர்ந்த 127 வயதான யோகா குரு பத்மஸ்ரீ சுவாமி சிவானந்தா யோகா செய்து பார்வையாளர்களை வியக்க வைத்துள்ளார். அவர், ஆகஸ்ட் 1896ல் பிறந்தவர் என்பதற்கான ஆதார் அட்டையையும் காண்பித்துள்ளார்.
கழுத்தின் மூலம் அவர் செய்யும் யோகா பயிற்சிகள் காணொளியாக சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.
மூத்த குடிமகனாக விளங்கும் பத்மஸ்ரீ சுவாமி சிவானந்தா 127 வயதிலும் தினந்தோறும் யோகா செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். அத்துடன், தனக்கான வேலைகளை தாமே அவர் செய்துகொள்கிறார்.
எண்ணெய் இல்லாத உணவுகளை மட்டுமே சாப்பிடும் இவர், வாயில் எல்லா உணவுப் பொருள்களையும் போட்டுக்கொள்ளாமல் ஒரு கட்டுப்பாட்டுடன் வாழ்வதே தனது நீண்ட ஆயுளுக்கான காரணம் என்றும் கூறியுள்ளார்.

