அமராவதி: தெலுங்கு தேசம் கட்சியின் மாநிலத் தலைவராக பி.சீனிவாச ராவ் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்றத் தேர்தலில் கஜுவாகா தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர் இவர்.
ஏற்கெனவே கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த கே. அட்சநாயுடு விவசாயத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
சந்திரபாபு நாயுடுவின் 25 பேர் அடங்கிய அமைச்சரவையில் அட்சநாயுடுவிடம், விவசாயம், கூட்டுறவு, சந்தைப்படுத்தல், கால்நடை வளர்ப்பு, பால்வள மேம்பாடு மற்றும் மீன்வளத் துறைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கிடையே, விசாகப்பட்டினம் தெலுங்கு தேசம் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக பணியாற்றிய சீனிவாச ராவ் யாதவ், புதிய தலைவர் பொறுப்பை வெற்றிகரமாக மேற்கொள்வார் என்று தெலுங்கு தேசம் கட்சியின் தேசியத் தலைவரும் ஆந்திர மாநில முதல்வருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்து உள்ளார்.

