விமான உணவில் பிளேடு

விமான உணவில் பிளேடு

1 mins read
ecf223a7-12a3-4048-a003-c38e417ee8e3
மென்று துப்பிய உணவில் கிடந்த பிளேடு. - படம்: சமூக ஊடகம்

புதுடெல்லி: விமானத்தில் பரிமாறப்பட்ட உணவில் உலோக பிளேடு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்ட புகாரை ஏர் இந்தியா விமான நிறுவனம் விசாரித்து வருகிறது.

பெங்களூரிலிருந்து அமெரிக்காவின் சான்ஃபிரான்சிஸ்கோ நகருக்கு ஜூன் 9ஆம் தேதி சென்ற ஏஐ175 விமானத்தில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

பத்திரிகையாளரான மத்துரஸ் பால் என்பவர் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை சமூக ஊடகத்தில் பகிர்ந்துகொண்டார்.

“விமானத்திற்குள் எனக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு இருப்பது தெரியாமல் வாயில் போட்டு இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்டபிறகே உணர்ந்தேன்.

“துப்பியபோதுதான் அது பிளேடு என்பது தெரியவந்தது. இதற்காக விமான பணிப்பெண் மன்னிப்பு கேட்டார். அந்த உணவை குழந்தை சாப்பிட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?,” என்று அவர் குறிப்பிட்டார்.

சில நாள்கள் கழித்து, உலகின் எந்தப் பகுதிக்கு வேண்டுமானாலும் உயர்தர வகுப்பில் (பிஸ்னஸ் கிளாஸ்) பயணம் செய்வதற்கான பயணச்சீட்டை இலவசமாக வழங்க ஏர் இந்தியா முன் வந்ததாகவும் அது லஞ்சம் என்று தமக்குத் தோன்றியதால் அதனை ஏற்க மறுத்துவிட்டதாகவும் திரு பால் தமது எக்ஸ் பதிவில் கூறினார்.

இதற்கிடையே, விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததை ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை தலைமை அதிகாரி ராஜேஷ் டோக்ரா உறுதி செய்தார்.

குறிப்புச் சொற்கள்