மும்பை: மும்பையில் இயங்கி வரும் ஐஐடி கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் கடந்த மார்ச் 31ஆம் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ‘ராவோஹன்’ என்ற பெயரில் ராமாயண நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
இந்த நாடகத்தில் பெண்ணியவாத கருத்துகளை முன்வைப்பதாக கூறி, ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்களையும் இந்துக்களின் நம்பிக்கையையும் கொச்சைப்படுத்தியுள்ளனர் என மாணவர்கள் சிலர் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.
மேலும் ‘ஐஐடி (பி) பாரத்’ என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்த நாடகம் தொடர்பான காணொளி காட்சிகளை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். மாணவர்கள் தங்களுக்கு கல்லூரி வளாகத்தில் வழங்கப்பட்ட சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி கடவுள் ராமரையும் ராமாயணத்தையும் அவமதித்து விட்டதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.
இந்தக் காணொளி பரவலான நிலையில், ஐஐடி மாணவர்களின் நாடகத்திற்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இதனிடையே சம்பந்தப்பட்ட மாணவர்களிடம் கல்லூரி நிர்வாகம் சார்பில் விளக்கம் கேட்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமாயண நாடகத்தை அரங்கேற்றிய 4 மாணவர்களுக்கு தலா ரூ.1.2 லட்சம் அபராதம் விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.