ஹைதராபாத்: அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் பவன் கல்யாணை எதிர்த்து முத்ரகடா பத்மநாபம் என்ற வேட்பாளர் போட்டியிட்டார். தான் தோல்வி அடைந்தால் தனது பெயரை மாற்றிக்கொள்வதாகவும் மேடைதோறும் அவர் சவால் விட்டிருந்தார்.
இந்நிலையில், தனது சவாலில் தோற்றதை அடுத்து, சமூக ஊடகங்களில் பவண் கல்யாண் ரசிகர்களின் கேலி, கிண்டலுக்கு ஆளானார்.
இதைத்தொடர்ந்து, பிதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் களமிறங்கிய ஒய்எஸ்ஆர்சிபி மூத்த தலைவர் முத்ரகடா பத்மநாபம் தனது பெயரை ‘பத்மநாப ரெட்டி’ என அதிரடியாக மாற்றிக்கொண்டுள்ளார்.
எவருடைய நெருக்கடியும் இன்றி சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே பெயரை மாற்றியதாக அவர் சமாளித்தாலும், இதன் பிறகாவது பவன் கல்யாணின் ரசிகர்கள் தன்னையும் தனது குடும்பத்தினரையும் தாக்கிப் பேசுவதை நிறுத்தவேண்டும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கைத் தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் வெளியானதில் பவன் கல்யாண் மட்டுமன்றி அவரது ஜனசேனா கட்சியும் அபரிமிதமான வெற்றியைப் பெற்றிருந்தது. மாநிலத்தின் துணை முதல்வராகவும் பவன் கல்யாண் முடிசூடியிருக்கிறார்.

