கோல்கத்தா: அண்மையில் நடந்து முடிந்த 18வது மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு மேற்கு வங்க மாநிலக் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ஆதிர் ரஞ்சன் சௌத்ரி விலகியுள்ளார்.
முன்னாள் மத்திய நிதியமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்துப் பேசியதற்குப் பின்னர் ஒருநாள் கழித்து இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இருப்பினும், அவரது பதவி விலகல் ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது குறித்து காங்கிரஸ் தலைமையகத்தில் இருந்து அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் பெரியளவில் வெற்றிபெறாததை அடுத்து தலைவர் பொறுப்பில் இருந்து அவர் விலகியதாகக் கூறப்படுகிறது.
பெஹ்ரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதானிடம் 85 ஆயிரத்து 22 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
ஆதிர் ரஞ்சன் சௌத்ரி 2012 முதல் 2014 வரை ரயில்வே இணை அமைச்சராகவும் 2019 முதல் 2024 வரை மக்களவைக் காங்கிரஸ் தலைவராகவும் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

