திருப்பதி: ஆந்திர மாநிலம், தாடேபள்ளியில் அரசு அனுமதியின்றி கட்டப்பட்டு வருவதாக கூறி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை சனிக்கிழமை அதிகாலை அதிகாரிகள் இடித்து தரை மட்டமாக்கினர்.
ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிக்கப்பட்ட சிறிது நேரத்தில் விசாகப்பட்டினத்துக்கு அடுத்து உள்ள பெண்டாடா பகுதியில் 2 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருவதாகக் கூறி ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கு விசாகப்பட்டினம் மாநகராட்சி சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது.
அக்கடிதத்தில் விசாகப்பட்டினம் மாநகராட்சி பெருநகரக் குழும ஆணையத்தின் அனுமதியின்றி கட்சி அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. இது குறித்து ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும். இல்லையென்றால் கட்சி அலுவலகம் இடிக்கப்படும் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து முன்னாள் முதல் அமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி செய்தியாளர்களிடம் கூறுகையில், “புதியதாக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற சிறிது நாட்களிலேயே சந்திரபாபு நாயுடு சர்வாதிகாரி போல் செயல்படுகிறார்.
“மாநிலத்தில் சட்டமும் நீதியும் மறைந்து விட்டது. இதற்காக உயர் சார் காங்கிரஸ் கட்சி தலை வணங்காது. எதிர்த்து போராடும் இந்த மிரட்டல் வன்முறைக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம். இந்த தவறான செயல்களைக் கண்டிக்க வேண்டும் என்று நாட்டில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளையும் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் தெரிவித்தார்.