மத்திய அமைச்சர் பதவிக்கு ஈடான எதிர்க்கட்சித் தலைவர் பதவி:ராகுலுக்கு ரூ.3.3 லட்சம் சம்பளம், ரூ.100 கோடி மதிப்பில் பங்களா

மத்திய அமைச்சர் பதவிக்கு ஈடான எதிர்க்கட்சித் தலைவர் பதவி:ராகுலுக்கு ரூ.3.3 லட்சம் சம்பளம், ரூ.100 கோடி மதிப்பில் பங்களா

2 mins read
15fd7b61-5d79-4555-9d5c-ae0ca5e9695f
எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி. - படம்: ஊடகம்
multi-img1 of 2

புதுடெல்லி: இந்தியாவில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளதால், ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் நியமித்துள்ளது.

இதனால், அவருக்கு ஏராளமான வசதிகளும் கிடைக்க உள்ளன. ராகுல் காந்திக்கு 8,250 சதுர அடி பரப்பளவில் டைப்-8 வகை பங்களா குடியிருப்பு கிடைக்கும்.

தனி வளாகத்தின் நடுவே வெள்ளை மாளிகைபோல் அமைந்துள்ள இந்தப் பங்களாவில் வரவேற்பறை, படுக்கையறைகள் என மொத்தம் 7 பெரிய அறைகள் உள்ளன.

இங்குப் பணியாற்றும் உதவியாளர்களுக்கென 4 சிறிய குடியிருப்புகளும் இருக்கும்.

அத்துடன், இந்தப் பங்களாவில் அரசு செலவில் இருக்கை, மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து பொருள்களும் போடப்பட்டிருக்கும்.

டெல்லியில் இதுபோன்ற ஒரு பங்களாவின் மதிப்பு ரூ.100 கோடி என்றும் வாடகை எனில் பல லட்ச ரூபாய் ஆகும் என்றும் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.

இதுபோன்ற பங்களாவில் ராகுல் வசிப்பது இது புதிதல்ல. இதற்குமுன், பிரதமர் இல்லத்தில் அவரது பாட்டி இந்திரா காந்தியுடன் ராகுல் தமது சிறு வயதில் வாழ்ந்துள்ளார். பிறகு தமது தந்தை ராஜீவ் காந்தி பிரதமரானபோதும் அதில் இருந்தார்.

ராகுலின் தாய் சோனியா காந்தி வசிக்கும் அரசு பங்களாவும் இதே வகையைச் சேர்ந்ததுதான் எனக் கூறப்படுகிறது.

ராகுல் காந்தியின் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியானது மத்திய இணையமைச்சர் பதவிக்கு ஈடானது. நாடாளுமன்ற உறுப்பினராக இவர் ரூ.2 லட்சம் மாத ஊதியம் பெற்று வந்த நிலையில், இனி ரூ.3.3 லட்சம் ஊதியம் பெறுவார்.

அதோடு, 14 உதவியாளர்களும் அரசு சார்பில் அவருக்குக் கிடைப்பார்கள்.

கடந்த 10 ஆண்டுகளாக அவையில் தமக்குப் பேச வாய்ப்பு அளிக்கப்படவில்லை என ராகுல் காந்தி புகார் கூறி வந்த நிலையில், இனி அனைத்து விவகாரங்கள், மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசுவதற்கு ராகுல் காந்திக்கு முக்கிய இடம் அளிக்கப்படும். இந்த நேரங்களில் எதிர்க்கட்சிகளின் குரலாக ஒலிக்கும் பொறுப்பு ராகுலுக்குக் கிடைக்க உள்ளது.

குறிப்புச் சொற்கள்