புதுடெல்லி: மத்தியில் ஆளும் பாஜக நீதித்துறையை அவமானப்படுத்தியதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம் சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை புதுடெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் முதல்வர் சோரன் பேசினார்.
“சிறையிலிருந்து வெளியே வந்தபிறகு சோனியா காந்தியை நான் சந்திக்கவில்லை. அதனால்தான் அவரைச் சந்திக்க வந்தேன். ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலுக்கான விவாதங்கள் நடைபெற்றன.
“இந்தியர்கள் மிகவும் சகிப்புத்தன்மையும், ஒத்துழைப்பும் மிக்கவர்கள். மத்தியில் ஆளும் பாஜக நீதித்துறையை அவமானப்படுத்தியுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு விரைவில் பிணை கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.
“கலால் கொள்ளை தொடர்பான பணமோசடி குற்றச்சாட்டில் கெஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால பிணை கிடைத்தது. ஆனால் கடந்த ஜூன் 25ஆம் தேதி இதே வழக்கில் சிபிஐ அவரை கைது செய்ததால், சிறையிலிருந்து அவரால் வெளியே வரமுடியவில்லை,” என்றார் திரு சோரன்.
முன்னதாக கலால் வழக்கில் ஹேமந்த் சோரன் கைதுசெய்யப்பட்ட நிலையில், ஜூன் 28ஆம் தேதி அன்று நீதிமன்றம் அவருக்கு விடுதலை அளித்தது. இதையடுத்து, எம்எல்ஏ கூட்டத்தில் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். இதன்பின்னர் சம்பாய் சோரன் முதல்வர் பதவியிலிருந்து விலகிய நிலையில் மீண்டும் ஜார்க்கண்டின் முதல்வராகப் பொறுப்பேற்றார் சோரன் என்பது குறிப்பிடத்தக்கது.