மாநிலங்களவையில் பெரும்பான்மையை விடக் குறைவாக உள்ள என்டிஏ எம்.பி.க்கள் எண்ணிக்கை

3 mins read
323b650f-9af1-4492-a0f8-52d8aeffd124
தற்போது பாஜக எம்.பி.க்களின் எண்ணிக்கை 86 ஆக உள்ளது. - படங்கள்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றால் இரு அவைகளிலும் அந்த மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக-வால் தனிப் பெரும்பான்மை பெற முடியவில்லை. 240 இடங்களில்தான் வெற்றி பெற்றது. அக்கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களைப் பெற்றது. இதனால் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் பிரதமர் மோடி 3வது முறையாகப் பதவி ஏற்றுள்ளார்.

மக்களவையில் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தற்போது தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மாநிலங்களவையிலும் தனிப் பெரும்பான்மை இல்லை. தனிப் பெரும்பான்மைக்குத் தேவையான எம்.பி.க்களின் எண்ணிக்கை 12 குறைவாக உள்ளது.

மாநிலங்களவை மொத்தம் 245 எம்.பி.க்களைக் கொண்டதாகும். மத்திய அரசின் பரிந்துரையின்படி நாட்டின் அதிபர் சில எம்.பி.க்களை நியமனம் செய்வார். அவ்வாறு நியமனம் செய்த நான்கு (ராகேஷ் சின்ஹா, ராம் ஷகல், சோனால் மான்சிங், மகேஷ் ஜெத்மலானி) எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இதனால் மாநிலங்களவையில் பா.ஜ.க. எம்.பி.க்களின் எண்ணிக்கை 86 ஆகக் குறைந்துள்ளது.

இண்டியா கூட்டணி எம்.பி.க்களின் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது. 245 எம்.பி.க்களை கொண்ட மாநிலங்களவையில் பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. தற்போது மாநிலங்களவையில் 225 எம்.பி.க்கள் உள்ளனர்.

இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 26, திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 13, ஆம் ஆத்மி மற்றும் திமுக-வுக்கு தலா 10 எம்.பி.க்கள் உள்ளனர்.

பாஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணியை அல்லாத சந்திரசேகர ராவின் பிஆர்எஸ், நியமன எம்.பி.க்கள் மற்றும் சுயேச்சை எம்.பி.க்களும் உள்ளனர்.

தற்போது ஒரு மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டுமென்றால் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கூடுதலாக 13 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.

ஆந்திர மாநிலத்தின் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (11), அதிமுக (4) ஆகிய இரண்டு கட்சிகளும் 15 எம்.பி.க்களை வைத்துள்ளன. இவர்கள் ஆதரவு தேவைப்படும்.

மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இரண்டு கட்சிகளும் பாஜக-வுடன் நல்ல உறவில் இருந்தன. ஆனால் தேர்தலின்போது அதிமுக கூட்டணியை முறித்துக் கொண்டது. ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு எதிராக பாஜக சந்திரபாபு நாயுடு கட்சியுடன் கூட்டணி வைத்தது. இதனால் இரண்டு கட்சிகளும் ஆதரவு கொடுக்குமா என்பது தெரியவில்லை.

அதேபோல் மாநிலங்களவையில் நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து வந்தது. ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இதனால் நவீன் பட்நாயக் தொடர்ந்து ஆதரவு கொடுப்பது சந்தேகம்தான்.

இவர்கள் யாரும் ஆதரவு தெரிவிக்க முன்வரவில்லை என்றால் நியமன எம்.பி.க்கள் ஆதரவை நாட வேண்டியிருக்கும். நியமன எம்.பி.க்கள் எண்ணிக்கை மொத்தம் 12 ஆகும்.

மாநிலங்களவையில் மொத்தம் 20 இடங்கள் காலியாக உள்ளன. இதில் இந்த ஆண்டுக்குள் 11 இடங்களுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது. மகாராஷ்டிரா, அசாம், பீகார் மாநிலங்களில் தலா இரண்டு இடங்களுக்குத் தேர்தல் நடைபெற இருக்கிறது.

ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், தெலுங்கானா, திரிபுரா ஆகிய ஐந்து மாநிலங்களில் தலா ஓர் இடத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது.

அசாம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், திரிபுரா ஆகிய மாநிலங்களில் ஏழு இடங்களில் வெற்றி பெற முடியும். மகாராஷ்டிரா மாநிலங்களில் பாஜக கூட்டணி ஒன்றிணைந்து செயல்பட்டால் இரண்டிலும் வெற்றி பெற முடியும். அத்துடன் ஒய்எஸ்ஆர், நியமன எம்.பி.க்கள் ஆதரவுடன் பெரும்பான்மையை எட்ட வாய்ப்புள்ளது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் நான்கு இடங்கள் காலியாக உள்ளது. சட்டமன்றத் தேர்தல் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானாவில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

குறிப்புச் சொற்கள்