புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தில் மேல்சபையில் 4 நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் நிறைவடைந்ததை அடுத்து, பாஜக எம்.பி.க்கள் எண்ணிக்கை 86 ஆகக் குறைந்து, அக்கட்சியில் பலம் குறைந்துள்ளது.
மேல்சபையில் மொத்தம் 245 உறுப்பினர்கள் உள்ளனர். இதில், 233 பேர் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 12 பேர் அதிபரால் நியமிக்கப்படுகிறார்கள். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் எம்பிக்கள் எண்ணிக்கை 101 ஆக உள்ளது. மேல்சபையில் ஏதேனும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டால் அதற்கு பெரும்பான்மை எம்பிக்கள் (குறைந்தது 123 பேர்) ஆதரவு தேவை. அதற்கு தேசிய ஜனநாயக அல்லது இண்டியா கூட்டணியில் இடம்பெறாத அதிமுக (4), ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் (11), நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் (9) ஆகிய கட்சிகள் யாருக்கு ஆதரவளிக்குமோ அதைப்பொறுத்து மசோதா நிறைவேறும்.
மேல்சபையில் காங்கிரஸ் கட்சிக்கு 26, திரிணாமுல் காங்கிரசுக்கு 13, ஆம்ஆத்மி மற்றும் திமுகவுக்கு தலா 10 உள்பட இண்டியா கூட்டணிக்கு மொத்தம் 87 உறுப்பினர்கள் உள்ளனர்.

