தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நீட் மறுதேர்வு இல்லை: உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

2 mins read
c92327f3-c1aa-4b6c-86e6-6c23a6248da9
வியாழக்கிழமை காலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: நீட் மறுதேர்வு நடத்த முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு வியாழக்கிழமை (ஜூலை 18) திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவான விவகாரத்தில், தேர்வை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் மனு அளித்துள்ளனர்.

இந்தக் குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிபிஐ மற்றும் நீட் தேர்வு நடத்திய தேசிய தேர்வு முகமையை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தேசிய தேர்வு முகமை கடந்த வாரம் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை நீட் தேர்வு முறைகேடு வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, லட்சக்கணக்கான மாணவர்கள் இந்த வழக்கை எதிர்நோக்கி காத்திருப்பதால் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்தார்.

தொடர்ந்து, இந்த வழக்கில் தேசிய தேர்வு முகமை ஏற்கெனவே பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ள நிலையில், சிபிஐ தரப்பிலும் பதிலளிக்கப்பட்டுள்ளது.

இந்த வினாத்தாள் கசிவால் ஒட்டுமொத்த தேர்வு முறையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் நிரூபித்தால் மட்டுமே தேர்வை ரத்து செய்ய முடியும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார்.

மேலும், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாமல் அனைத்து மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த உத்தரவிட முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, வாதத்தை முன்வைத்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், “நீட் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களுக்கும் மறுதேர்வு நடத்த வலியுறுத்தவில்லை, நீட் தேர்வில் தேர்வான 1.08 லட்சம் மாணவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்த வேண்டும்,” என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும், நீட் தேர்வு முறைகேடு குறித்து சென்னை ஐஐடி சமர்ப்பித்த அறிக்கை ஒருதலைபட்சமானது என்று மனுதாரரின் வாதத்துக்கு மத்திய அரசு தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்