போபால்: மத்தியப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் மின்னல் தாக்கியதில் ஒன்பது வயது சிறுவன் உட்பட ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் போபால் முன்னறிவிப்புப் பொறுப்பாளர் திவ்யா சுரேந்திரன் கூறுகையில், “அடுத்த 24 மணி நேரத்தில் மத்தியப் பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது,” என்றார்.
“அசோக் நகர் மாவட்டத்தின் பங்கரியா-சக் கிராமத்தில் மின்னல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழந்தனர். அத்துடன், தீக்காயம் காரணமாக மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
“இதேபோல், சத்தர்பூர் பகுதியில் உள்ள பள்ளி மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்றாம் வகுப்பு மாணவர் ரவீந்தர் ரைக்வார் மின்னல் தாக்கி உயிரிழந்தார். மகராஜ்பூர் பகுதியில் விவசாயி ஒருவரும் குவாலியர் பகுதியில் ஒரு ஆணும் பெண்ணும் மின்னல் தாக்கியதில் உயிரிழந்தனர்.
“பன்னாவின் அஜய்கர் பகுதியில் 40 வயதான விவசாயி பலியானார். அங்கு வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த மூன்று ஆடுகளும் மின்னல் தாக்கியதில் இறந்தன,” என்று போபால் நகரைச் சேர்ந்த காவல்துறையினர் கூறியுள்ளனர்.