புதுடெல்லி: இவ்வாண்டும் அமர்நாத் யாத்திரை தொடங்கி ஏராளமான மக்கள் குகை லிங்கத்தை தரிசனம் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இவ்வாண்டு யாத்திரையில் இதுவரை 3.75 லட்சம் பக்தர்கள் குகை லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர்.
இந்தாண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29ஆம் தேதி தொடங்கி 21 நாள்களைக் கடந்துள்ளது.
இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தைத் தரிசித்துவிட வேண்டும் என்பது இந்துக்களின் விருப்பமாக உள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் இடியுடன்கூடிய மழை இடைவிடாது பெய்தாலும் வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் சுமார் 11,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் குகைக் கோயிலை தரிசித்துள்ளனர்.
இதற்கிடையே ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி நிவாஸில் இருந்து 3,471 பேர் அடங்கிய மற்றொரு குழு சனிக்கிழமை ( ஜூலை 20) புறப்பட்டது. 35 வாகனங்களில் 1,073 பேர் பால்டால் அடிவார முகாமிலிருந்தும், 2,398 பேர் அடங்கிய குழு 79 வாகனங்களில் நுன்வான் அடிப்படை முகாமிலிருந்தும் புறப்பட்டது.
52 நாள் யாத்திரை ஆகஸ்ட் 29 அன்று ஷ்ரவண பூர்ணிமா, ரக்ஷா பந்தன் பண்டிகைகளுடன் நிறைவடைகிறது.