புதுடெல்லி: இந்தியா ரூ.70,000 கோடி மதிப்பில் அதி நவீன போர்க்கப்பல்கள் தயாரிக்க உள்ளது.
‘17பி’ என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திட்டத்துக்கு பாதுகாப்பு அமைச்சு விரைவில் ஒப்புதல் அளிக்க உள்ளது.
கப்பல்களில் பொருத்தப்படும் பீரங்கிகள், பிரம்மோஸ் ஏவுகணைகள், நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்கும் ஆயுதங்கள், மின்னியல் போர்க் கருவிகள் உள்பட அனைத்து அம்சங்களும் இந்தியத் தொழில்நுட்பத்தில் இருக்கும்.
இந்திய அரசுக்கு சொந்தமான மும்பையில் உள்ள மசகான் கப்பல் கட்டும் நிறுவனம், கோல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் இரண்டும் இணைந்து போர்க்கப்பல்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபடும்.
மசகான் நிறுவனம் இந்த நிதியாண்டுக்குள் 3 கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்களை ரூ.35,000 கோடி மதிப்பில் தயாரிக்கும் ஒப்பந்தத்திலும் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள், இந்தியாவில் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 6 கல்வாரி ரக நீர்மூழ்கிக் கப்பல்களைவிடப் பெரியதாக இருக்கும்.
கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினியர்ஸ் தற்போது அடுத்த தலைமுறை ரோந்துக் கப்பல்களையும், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்கி அழிக்கும் போர்க்கப்பல்களையும் தயாரித்து வருகிறது. இந்த நிறுவனம் வெளிநாட்டு தருவிப்பு ஆணைகளையும் பெற்றுள்ளது.