புதுடெல்லி: இயற்கை காரணங்களுக்காகவும் வேட்டையாடுதல் உள்ளிட்ட காரணங்களுக்காகவும் இந்தியா முழுவதும் கடந்த ஐந்தாண்டுகளில் 628 புலிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் தரவுகளின் படி, கடந்த 2019 ஆம் ஆண்டில் 96 புலிகளும் 2020ஆம் ஆண்டில் 106 புலிகளும் 2021ஆம் ஆண்டில் 127 புலிகளும் 2022ஆம் ஆண்டில் 121 புலிகளும் 2023ஆம் ஆண்டில் 178 புலிகளும் இறந்துள்ளன.
2012க்குப் பிறகு கடந்த 2023 ஆம் ஆண்டில் புலிகள் இறப்பு எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளதாக தரவுகள் வெளிப்படுத்துகின்றன.
அரசின் சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 3,682 ஆக இருந்தது. இது உலகின் மொத்த புலிகளின் எண்ணிக்கையில் 75 விழுக்காடாகும்.
புலிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய அரசாங்கம் 1973 ஏப்ரல் 1ல் சிறப்புத் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
தற்போது, இந்தியாவில் 78,735 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 55 புலிகள் காப்பகங்கள் உள்ளன.

