ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அண்மை காலமாக பயங்கரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீர் மாநில மலைப்பகுதியில் நவீன ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
அவர்களைப் பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர். குப்வாரா மாவட்டம் காம்காரி பகுதியில் பயங்கரவாதிகள் மறைந்து இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்போது அவர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.
பதிலுக்குப் பாதுகாப்புப் படையினரும் திருப்பி சுட்டனர். இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இந்தச் சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். இந்திய ராணுவ வீரர் ஒருவரும் மரணமடைந்தார்.