புதுடெல்லி: டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐயால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார்.
நாடு முழுவதும் கெஜ்ரிவாலுக்கு எதிராக 35 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் நியாயமான விசாரணைக்காக வழக்கறிஞரிடம் வாரத்திற்கு மேலும் இரண்டு முறை காணொளி மூலம் ஆலோசனை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா முன் வியாழக்கிழமை (ஜூலை 25) விசாரணைக்கு வந்தது. அப்போது கெஜ்ரிவால் மேலும் இரண்டு முறை வழக்கறிஞரிடம் ஆலோசனை நடத்த அனுமதி அளித்தார்.
அமலாக்கத்துறை மற்றும் திகார் ஜெயில் அதிகாரிகள் இந்த மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும் நீதிமன்றம் அவரது கோரிக்கைக்கு அனுமதி வழங்கியது.
அமலாக்கத்துறையால் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்டார். விசாரணை நீதிமன்றம் ஜூன் 20ஆம் தேதி பிணை வழங்கியது. உயர்நீதிமன்றம் அதற்கு தடைவிதித்தது. ஜூலை 12ஆம் தேதி உச்ச நீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பிணை வழங்கியது.
இதற்கிடையே திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலை சிபிஐ இதே வழக்கில் ஜூன் 26ஆம் தேதி கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
சிபிஐ கைது செய்த வழக்கில் பிணை கிடைத்தால் கெஜ்ரிவால் திகார் சிறையில் இருந்து வெளியில் வர வாய்ப்புள்ளது.
2022ஆம் ஆண்டு டெல்லி மாநில மதுபானக் கொள்கையை அம்மாநில துணைநிலை ஆளுநர் ரத்து செய்தார். இந்த கொள்கை உருவாக்கப்பட்டு, செயல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றஞ்சாட்டி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.

