கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இதுவரை 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் மாயமாகி உள்ளதால் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இயற்கை பேரிடர் இந்தியா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராஜஸ்தான் மாநில முன்னாள் எம்.எல்ஏ.வும் பாஜக மூத்த தலைவருமான கியான் தேவ் அகுஜா, வயநாட்டில் நிலச்சரிவு ஏற்படுவதற்கு அங்கு பசுவதை செய்யப்படுவதே காரணம் எனக் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், “2018ஆம் ஆண்டு முதல் நடந்த பேரிடர்களை நீங்கள் ஆராய்ந்து பார்த்தால், பசுவதை செய்யப்பட்ட பகுதிகளில்தான் அதிக பேரழிவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது உங்களுக்கு தெரியும். கேரளாவில் பசுவதை அதிகம் நடப்பதாலேயே இந்தப் பேரழிவானது நடந்துள்ளது. இதற்கு மேலும் கேரளாவில் பசுவதையை நிறுத்தவில்லை என்றால் இதுபோன்று தொடர்ந்து பேரழிவுகள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்,” எனச் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
தற்போது உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் உள்ளிட்டவை ஏற்பட்டிருந்தாலும் வயநாட்டுடன் ஒப்பிடும்போது அங்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறைவானதே ஆகும் என்று அவர் கூறியுள்ளார்.
பல உயிர்களைப் பலிவாங்கிய இந்த இயற்கைப் பேரழிவுக்கு மதச் சாயம் பூசுவது தவறு என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) பொதுச்செயலாளர் டி.ராஜா கியான் தேவ் அகுஜாவின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

