புதுடெல்லி: உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்திய ஊடகவியலாளர்கள் குறைந்த அளவிலான ஊதியம் பெறுவதாகவும், அவர்களுக்குச் சரியான ஊதியத்தை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி. சிவதாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக மாநிலங்களவையில் பேசிய சிவதாசன், ‘ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்’ என்ற அமைப்பால் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரை ஒன்றை எடுத்துக்காட்டினார்.
பத்திரிகை சுதந்திரக் குறியீட்டின் 2024 பதிப்பில் 180 நாடுகளில் இந்தியா 159வது இடத்தில் உள்ளது. இது கடந்த 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் சற்று முன்னேற்றம் காணப்பட்டாலும், அவர்கள் சட்டவிரோதச் செயல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப் பிரிவுகளில் கைது செய்யப்படுகின்றனர். அண்மையில் ஊடகவியலாளர்கள் பிரபீர் புர்காயஸ்தா, சித்திக் கப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை உதாரணங்களாகக் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவின் பல்வேறு இடங்களில் கடந்த பத்து ஆண்டுகளில் பிரபல பத்திரிகை ஆசிரியர் கவுரி லங்கேஷ் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டு விட்டனர். எனவே, அவர்களுக்குப் பாதுகாப்பு, செய்யும் பணிக்கேற்ற ஊதியம் கிடைப்பதை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என்று சிபிஎம் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவதாசன் வலியுறுத்தியுள்ளார்.

