ஹிண்டன்பர்க் அறிக்கையால் அதானி நிறுவன பங்குகள் 17 விழுக்காடு வீழ்ச்சி

2 mins read
cc01bb76-bbaa-4e36-9dc1-739d30dba331
அதானி நிறுவன பங்குகள் சரிவுடன் வர்த்தகம் நடைபெற்றது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனத்தின் அண்மைய அறிக்கையால் அதானி நிறுவன பங்குகள் 17 விழுக்காடு வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரியில் அதானி குழுமம் தொடா்பான குற்றச்சாட்டுகளை ஆய்வறிக்கையாக அந்நிறுவனம் வெளியிட்டது.

அதில் “அதானி குழுமத்தைச் சோ்ந்த ஏழு நிறுவனங்களும் தங்களது நிதி நிலை அறிக்கையை உண்மைக்கு புறம்பாக வலுவாக காட்டி பங்குகளின் விலையை அதிகரித்து முறைகேடு செய்தது,” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆய்வறிக்கை வெளியிட்ட அடுத்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் ரூ. 12.6 லட்சம் கோடி சொத்து மதிப்பை அதானி குழுமம் இழந்தது. மீள் நடவடிக்கைகள் மூலம் தற்போது உலகின் 12வது பெரிய பணக்காரராக அதானி திகழ்கிறாா்.

இதற்கிடையே சந்தையில் ஆதாயம் தேட உண்மைகளை திரித்து பொய் தகவல்களைப் பரப்புவதாக ஹிண்டன்பா்க் ரிசா்ச் நிறுவனத்துக்கு செபி அமைப்பான இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜூன் 26-ஆம் தேதி எச்சரிக்கை கடிதத்தை அனுப்பியது.

இந்த நிலையில் அதானி குழும முறைகேடு புகாா் தொடா்புடைய நிதி நிறுவனங்களின் முதலீட்டுத் திட்டங்களில் செபியின் தலைவரும், அவரது கணவரும் பங்குகளை வைத்திருப்பதால் அக்குழுமத்துக்கு எதிரான விசாரணையில் செபி ஆா்வம் காட்டவில்லை என ஹிண்டன்பா்க் மீண்டும் குற்றச்சாட்டை கூறியுள்ளது. அதோடு அதற்கான ஆதாரங்களையும் அந்த ஆய்வு நிறுவனம் வெளியிட்டது.

செபி தலைவர் மாதபி பூரிபுச்சுடன் எங்களுக்கு எந்த வணிக உறவும் இல்லை என்று அதானி நிறுவனமும் ஹிண்டன்பர்க் கூறிய குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்றும் மாதபி பூரியும் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதானி நிறுவனத்துடன் செபி தலைவருக்கு தொடர்பு இருப்பது குறித்து காங்கிரஸ் கருத்து தெரிவித்தபோது ஊழலை விசாரிப்பவரே மோசடியில் ஈடுபட்டுள்ளார் என்றும் பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கூறியது.

ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியான நிலையில் அதானி குழுமத்துடன் அனைத்து நிறுவனங்களின் பங்குகள் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 12) சரிவுடன் தொடங்கியுள்ளது.

வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 436.45 புள்ளிகள் சரிந்து 79,269 புள்ளிகளாக வர்த்தகமானது.

நிப்டி 142.3 புள்ளிகள் சரிந்து 24,225.20 புள்ளிகளாக இருந்தது.

ஹிண்டன்பர்க் அறிக்கை எதிரொலியால் அதானி குழும பங்குகள் 17 விழுக்காடு அளவுக்கு சரிவை சந்தித்தன.

அதானி எனர்ஜி 17%, அதானி டோட்டல் கேஸ் 13.39%, என்டிடிவி 11%, அதானி பவர் 10.94% சரிவை கண்டுள்ளது.

மேலும், அதானி எனர்ஜி 6.96 விழுக்காடு, அதானி வில்மர் 6.49 விழுக்காடு, அதானி என்டர்பிரைசஸ் 5.43 விழுக்காடு, அதானி போர்ட் 4.95 விழுக்காடு, அம்புஜா சிமென்ட்ஸ் 2.53 விழுக்காடு மற்றும் ஏசிசி 2.42 விழுக்காடு என திங்கட்கிழமை சரிவுடன் வர்த்தகம் நடைபெற்றது.

குறிப்புச் சொற்கள்