புவனேஷ்வர்: இந்தியா அதன் சுதந்திரத் தினத்தை நாடு முழுவதும் வெகுவிமரிசையாகக் கொண்டாடி வருகிறது.
இந்நிலையில் ஓடிசாவின் கட்டாக்கில் நடைபெற்ற சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் பெண்களுக்கு மாதவிடாய் நாள்களில் ஊதியத்துடன் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படும் என்று அம்மாநில துணை முதல்வர் பிராவதி பரிடா அறிவித்தார்.
இந்தத் திட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்க பெண் ஊழியர்களுக்கு மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும், மாதவிடாய் நாள்களில் முதல் அல்லது 2வது நாளில் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களின் உடல் ஆரோக்கியத்துக்கு இந்தத் திட்டம் சிறப்பானதாக இருக்கும் என்று துணை முதல்வர் பிராவதி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தற்போது கேரளா மற்றும் பீகார் மாநிலங்களில் மட்டும்தான் மாதவிடாய் விடுமுறை வழங்கப்படுகிறது. தற்போது ஒடிசாவிலும் அத்தகைய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

