சென்னை: குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து செல்வராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் கருத்துக்கூறிய நீதிபதிகள் யார் குண்டர்கள் என்பது குறித்து அரசு கவனமாக பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.
நிதி மோசடியில் ஈடுபட்டதற்காக குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டதை எதிர்த்து செல்வராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது காவல் துறை தரப்பில், மனுதாரரின் உதவியுடன் ரூ.3.30 கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளது. அதனால், குண்டர் தடுப்பு சட்டத்தில் மனுதாரர் குண்டர் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், குண்டர் சட்டத்தை சர்வசாதாரணமாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. தனி நபர் சார்ந்த குற்றங்களுக்கு குண்டர் சட்டத்தை பயன்படுத்தக்கூடாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
மேலும் யார் குண்டர்கள் என்பது குறித்து கவனமாக பரிசீலிக்க வேண்டும் என அரசுக்கு அறிவுறுத்தினர்.

