லண்டன் ஹோட்டலில் பாலியல் தாக்குதல்: ஏர் இந்தியா ஊழியர் குற்றச்சாட்டு

லண்டன் ஹோட்டலில் பாலியல் தாக்குதல்: ஏர் இந்தியா ஊழியர் குற்றச்சாட்டு

1 mins read
69ff1f10-5693-4a68-90a2-ff8a32dd53fc
படம்: - இணையம்

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் விமானத்தில் பணியாற்றும் ஊழியர்களில் ஒருவர், இங்கிலாந்துத் தலைநகர் லண்டனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஒருவர் தன்னைப் பாலியல் ரீதியாகத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) இரவு அச்சம்பவம் நிகழ்ந்ததாக சம்பந்தப்பட்ட மாது சொன்னார். ஏர் இந்தியா ஊழியர்கள் சிலர், சம்பவம் லண்டனின் ஹீத்ரோ பகுதியில் இருக்கும் ரேடிசன் ரெட் ஹோட்டலில் நிகழ்ந்ததாகக் கூறினர்.

அந்த ஹோட்டலில் போதுமான பாதுகாப்பு இல்லை என்றும் ஒருவர் தங்களைப் பின்தொடர்வதாகவும் ஏர் இந்தியா ஊழியர்கள் ஏற்கெனவே பலமுறை புகார் எழுப்பியிருந்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

மாது, ஹோட்டல் அறையில் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒருவர் சாவி அட்டையைப் பயன்படுத்தி உள்ளே நுழைந்ததாகக் கூறப்படுகிறது. அந்த மாது, கண்ணில் குத்தப்பட்டு மோசமான முறையில் தாக்கப்பட்டார் என்று சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டது.

அவர் உதவிக்காக அலறியதைக் கேட்டதும் அருகில் இருக்கும் அறைகளில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி தாக்கியவரைப் பிடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட மாது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்றும் இப்போது அவர் மும்பை திரும்பிவிட்டார் என்றும் ஏர் இந்தியாவில் சிலர் கூறினர். அந்நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இருவர், மாதைப் பாதுகாப்பாக அழைத்துவர லண்டனுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்