ஏமாற்று வடிவமைப்பு உத்தி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அபராதம்

ஏமாற்று வடிவமைப்பு உத்தி: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு அபராதம்

1 mins read
49bd5d6c-064c-428a-9262-bfe84bf767f6
அனைத்து விமான நிறுவனங்களும் இதேபோன்று ஏமாற்று உத்திகளைக் கையாள்வதாக இந்திய விமானிகள் சங்கம் தெரிவித்துள்ளது. - கோப்புப் படம்: ஏஎன்ஐ

புதுடெல்லி: விமானப் பயணச்சீட்டு முன்பதிவின்போது முறைகேட்டில் ஈடுபட்டு நுகர்வோரை ஏமாற்றியதாக எழுந்துள்ள புகாரின் பேரில், ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இணையத்தளத்தில் ‘டார்க் பேட்டர்ன்ஸ்’ எனப்படும் ஏமாற்று வடிவமைப்பு உத்திகளைக் கையாண்டு, விதிமுறைகளை மீறியதாக அந்நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்தியாவின் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நிறுவனத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

பயணச்சீட்டு முன்பதிவின்போது வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி கூடுதல் கட்டணச் சேவைகளைத் திணிப்பது, விருப்பமில்லாத திட்டங்களில் கட்டாயமாக இணைப்பது போன்ற ஏமாற்று உத்திகளை ‘டார்க் பேட்டர்ன்ஸ்’ எனக் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு வாடிக்கையாளர்களுக்குத் தெரியாமலேயே அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயல்பாடானது, நுகர்வோரின் சுதந்திரமாக முடிவெடுக்கும் உரிமையைப் பறிக்கும் செயல் என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து விமான நிறுவனங்களும் இதேபோன்று ஏமாற்று உத்திகளைக் கையாள்வதாக இந்திய விமானிகள் சங்கத்தின் தலைவர் கேப்டன் சாம் தாமஸ் கூறியுள்ளார்.

ஒரு விமான நிறுவனத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் என்பது நல்ல நகைச்சுவையைப் போன்றது என்றும் இதுபோன்ற சிறிய தொகைகள் நிறுவனங்களின் தவறான நடைமுறைகளைத் தடுக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்பு இண்டிகோ விமான நிறுவனத்திற்கு இதேபோன்ற தவற்றுக்கு 22 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இதனிடையே, தொழில்நுட்பக் கோளாற்றால் தவறு நடந்துவிட்டதாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்