லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேசத்தில் தெருவில் சுற்றித் திரியும் மாடுகள் மனிதர்களைத் தாக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
அதேபோல், அவற்றால் சாலைகளில் விபத்துகளும் அதன் காரணமாக உயிரிழப்புகளும் நேரிடுகின்றன.
இந்நிலையில், சாலையில் முட்டி மோதிக்கொண்டிருந்த இரு காளைகளைப் பிரித்துவிட முயன்றபோது அவை விரட்டியதால் காவலர்கள் தெறித்து ஓடிய சம்பவம் சம்பல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.
கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.
சாலையில் இரு காளைகள் மல்லுக்கட்டியபோது சாலைத் தடுப்பைக் கொண்டு அவற்றைப் பிரித்துவிட முயன்றார் காவலர் ஒருவர். ஆனால், அவர் அவ்வாறு செய்ததற்குப் பிறகுதான் காளைகளின் முட்டலில் வேகம் கூடியது.
ஆயினும், அந்தக் காவலர் மீண்டும் அவற்றைப் பிரித்து, விரட்ட முயன்றார்.
இதனால் வெகுண்டெழுந்து திடீரெனத் திரும்பிய காளைகள் விரட்டத் தொடங்கியதும் அங்கிருந்த காவலர் இருவரும் ‘தலை தப்பித்தால் தம்பிரான் புண்ணியம்’ என்ற வகையில், தெறித்து ஓடுவதைக் காணொளி காட்டுகிறது.
நல்லவேளையாக, காளைகள் விரட்டியதில் ஒருவரும் காயமடையவில்லை.
இந்தக் காணொளியைத் தமது சமூக ஊடகப் பக்கத்தில் பகிர்ந்துள்ள சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.