ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணியாளர் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளுக்கு எதிராக 24 நாள்களாக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரசுத் துறை தேர்வுகளில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும், தேர்வு முறைகேடுகளைத் தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளை மாநில அரசு ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் நிறைவேற்றத் தவறினால் ஆகஸ்ட் 20ஆம் தேதி ராஞ்சியிலுள்ள அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் இல்லத்தை முற்றுகையிடப்போவதாக ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 17) அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், முதல்வரின் இல்லத்திற்கு வெளியே தர்ணா போராட்டம் நடத்தவிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
தங்களது கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை எனில், முதல்வர் பதவியிலிருந்து ஹேமந்த் சோரன் பதவி விலக வலியுறுத்தப்படும் என மாணவர்கள் குறிப்பிட்டனர்.
போராட்டம் தொடங்கியதிலிருந்து அவர்கள் முதல்வரின் பதவி விலகலைக் கோருவது இதுவே முதல்முறை.
இதற்கிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை ஜார்க்கண்ட் அரசு கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ அமைப்பின் பிரதிநிதி பியூஷ் குமார் சிங் குற்றம் சாட்டினார்.
போராட்டம் தொடங்கியபோது, ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் முதல்வர் சோரன் போராட்டக்காரர்களின் கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காவிட்டால், ஜார்க்கண்ட் அரசுக்கான ஆதரவை காங்கிரஸ் திரும்பப் பெறும் எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தங்களுக்கு உறுதியளித்திருந்ததாகப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
ஆகஸ்ட் 15ஆம் தேதி கடந்த பின்னரும், தங்களின் கோரிக்கைகளுக்குத் தீர்வு காண அரசு எந்தவொரு தீர்க்கமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் தாங்கள் ஏமாற்றப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, ஜார்க்கண்ட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஹேமந்த் சோரன், ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்மையை எரித்து, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மாணவர்களின் பிரதிநிதிகளை நேரில் சந்தித்துப் பேச வேண்டும் என ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ஆகஸ்ட் 14ஆம் தேதி அவர் எழுதிய கடிதத்தில், மாணவர்களின் நியாயமான கவலைகளுக்கு உரிய தீர்வு காண்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


