புதுடெல்லி: மாணவர்களுக்கு போராடும் உரிமை உள்ளது என்றும் அவர்களை வழக்கறிஞர் மன்றத்தால் தடுக்க முடியாது என்றும் இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்துள்ளார்.
தமக்கும் மாணவர்களுக்கும் இடையேயான பிரச்சினையில் வழக்கறிஞர் மன்றம் தலையிட்டது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு மாணவர்களையும் கரப்பான் பூச்சிகளையும் ஒப்பிட்டுத் தலைமை நீதிபதி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள தேசிய சட்டப் படிப்பு, ஆராய்ச்சி நிறுவன பட்டமளிப்பு விழாவுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அழைக்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது.
தங்கள் ஏதிர்ப்பை பதிவு செய்யும் விதமாக துணை வேந்தருக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து, மாணவர்கள் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபட்டால் வழக்கறிஞர் மன்றத்தில் அவர்களைப் பதிவு செய்ய முடியாது என்று இந்திய வழக்கறிஞர் மன்றத் தலைவரும் பாஜக எம்.பி.யுமான மன்னன் குமார் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மேலும் தேசிய சட்டப் படிப்பு, ஆராய்ச்சி நிறுவனத்தின் 2026ஆம் ஆண்டு மாணவர்களை மாநில வழக்கறிஞர் மன்றத்தில் வழக்கறிஞர்களாக பதிவு செய்ய கூடாது என்றும் அவர் ஒரு சுற்றறிக்கை அனுப்பினார்.
இதையடுத்து சில வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ததை அடுத்து தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு அம்மனுவை விசாரித்தது.
அப்போது, தாம் மாணவராக இருந்த போதும் இன்றுள்ள மாணவர்களைப் போல் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தலைமை நீதிபதி குறிப்பிட்டார்.
ஜனநாயக முறையில் அமைதியாகப் போராடும் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் அதில் எந்த அமைப்பும் தலையிடத் தேவை இல்லை என்றும் தலைமை நீதிபதி சூர்யகாந்த் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
“எது குறித்தும் மாணவர்கள் நேரடியாக எனக்கு கடிதம் எழுதலாம். தேசிய சட்டப் படிப்பு, ஆராய்ச்சி நிறுவன மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்து விரைவில் வழக்கறிஞராக பதிவு செய்ய வேண்டும். அவர்களை உடனடியாக சட்ட உதவி மையத்தில் பணி அமர்த்த தயாராக உள்ளேன்,” என்று தலைமை நீதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார்.


