புதுடெல்லி: ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களது பெண் ஆசிரியரைப் பழிவாங்க நாற்காலியின் கீழ் பட்டாசு போன்ற வெடிகுண்டை வைத்து வெடிக்கச் செய்துள்ளனர்.
அண்மையில் அறிவியல் பாடம் எடுக்கும்போது அந்த ஆசிரியர் மாணவர்களைத் திட்டியுள்ளார். அதனால் அவரைப் பழிவாங்க மாணவர்கள் யூடியூப் (Youtube) காணொளிகளைப் பார்த்து வெடிகுண்டு தயாரித்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் ஆசிரியர் காயமின்றி உயிர் தப்பினார். விசாரணையில் வகுப்பில் உள்ள 15 மாணவர்களில் 13 பேர் வெடிகுண்டு தயாரிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து அந்த 13 மாணவர்களையும் ஹரியானா கல்வித்துறை ஒரு வாரத்துக்கு தற்காலிகமாக இடைநீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

