புதுடெல்லி: ரயில்களில் தரமற்ற உணவு விநியோகித்ததற்காக ஒப்பந்த நிறுவனங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவில் ரயில்கள், ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சமையல் கூடங்களின் சுகாதாரம், கூடுதல் கட்டணம் வசூலிப்பு போன்ற புகார்கள்மீது ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தது.
விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட உரிமையாளர்களின் ஒப்பந்தங்களை ரத்து செய்தல், தரம் குறைவான உணவுகளை விநியோகம் செய்பவர்களைக் கருப்புப் பட்டியலில் சேர்த்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டது.
ரயில்களில் கடந்த 3 ஆண்டுகளாக தரமற்ற உணவு விநியோகம், சுகாதாரமற்ற சமையல் தொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட உணவு ஒப்பந்த நிறுவனங்களுக்கு இந்திய ரயில்வே ரூ.5.13 கோடி அபராதம் விதித்துள்ளது.
ரயில்வே அமைச்சின் தரவுகளின்படி, இந்திய ரயில்வேயில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.58 கோடி உணவுப் பொட்டலங்கள் பயணிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன. இதில் உணவின் தரம் குறித்து வரும் புகார்களின் எண்ணிக்கை 0.0008 விழுக்காடு மட்டுமே என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் எழுத்துபூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
உணவின் தரத்தை மேலும் உயர்த்த ரயில்வே வாரியம் பல்வேறு நவீன தொழில்நுட்பம் புகுத்தி வருகிறது. ஐஆர்சிடிசி மூலம் இயக்கப்படும் முக்கியச் சமையல் கூடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு சமையல் முறைகள் நேரலையாகக் கண்காணிக்கப்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.


