திருப்பதி: திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையனைத் தரிசிக்க தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்து செல்கின்றனர். மேலும், பண்டிகை நாள்களிலும் விடுமுறை நாள்களிலும் லட்சக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம் என்பதால் அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்தச் சூழலில் தற்போது பண்டிகைக் காலம் என்பதால் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர்.
இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் திருமலை பிரசாதம் வழங்கும் லட்டு முகப்பில் திடீரென தீ விபத்து நேரிட்டது. லட்டு விநியோக வளாகத்தில் உள்ள 47ஆம் எண் முகப்பில் மின்சார இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. லட்டு விநியோக முகப்பில் இருந்து கரும்புகை வெளிவருவதைப் பார்த்த பக்தர்கள் அங்கிருந்து அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தேவஸ்தான மின்சாரத் துறை அதிகாரிகள், மின்விநியோகத்தை நிறுத்தி, மின்சார இணைப்பைத் துண்டித்து தீ விபத்தைத் தடுத்து நிறுத்தினர். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது.