புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பெயர் விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மக்களவைத் தேர்தலின்போது வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்யப்பட்டு, வாக்கு திருட்டு நடைபெற்றதாக குற்றம்சாட்டிய ராகுல் காந்தி, கடந்த வாரம் அதற்கான ஆதாரங்களை வெளியிட்டார்.
ஆனால், அந்தக் குற்றச்சாட்டுகளை தலைமைத் தேர்தல் ஆணையம் மறுத்தது.
இதனிடையே, பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இது தொடர்பான விசாரணை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மாலா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 14) நடைபெற்றது.
அப்போது வாக்காளர் பட்டியலில் 65 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தங்களது தொகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள் மற்றும் பெயர் மாற்றம் செய்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவ்வாறு நீக்கப்பட்டவர்களின் பெயர்களை இணையத்தளத்தில் வெளியிடலாமே என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு வாக்காளர்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் சில முடிவுகளை எடுக்க தனக்கு அதிகாரம் உள்ளது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட 65 லட்சம் பேரின் பெயர்களை மூன்று நாள்களில் இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், நீக்கப்பட்ட காரணத்தை தெளிவாகக் குறிப்பிடுவதோடு, மாவட்ட வாரியாக எத்தனை பேர் நீக்கப்பட்டனர் என்பதையும் குறிப்பிட்டு பட்டியலை வெளியிட வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்திற்கு அவர்கள் உத்தரவிட்டனர்.