வக்பு சட்டத்துக்கு முழுமையாகத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

2 mins read
10dbb946-3c9f-42e3-8194-b74db62505df
கடந்த ஏப்ரல் மாதம் வக்பு திருத்தச் சட்டம் அமலுக்கு வந்தது. அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் வழக்குத் தொடுத்தனர். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: வக்பு திருத்தச் சட்டத்தை முழுவதுமாக நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இருப்பினும் அச்சட்டத்தில் உள்ள சில விதிகளுக்கு இடைக்காலத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்தச் சட்டம், அதிபரின் ஒப்புதலுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்தச் சட்டத்தை எதிர்த்துக் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கைத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பில் திங்கட்கிழமை (செப்டம்பர் 15) உத்தரவிட்ட தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு, “வக்பு திருத்தச் சட்டம் முழுமைக்கும் இடைக்காலத் தடை விதிக்க வாய்ப்பு இல்லை.

ஆனால் இந்தச் சட்டத்தில் உள்ள சில பிரிவுகளுக்கு நாங்கள் தடை விதித்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளது.

வக்பு வாரியத்தை உருவாக்க ஒருவர் ஐந்து ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்ற விதிக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

ஒருவர் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவரா என்பதைத் தீர்மானிக்க விதிகள் வகுக்கும் வரை இந்தத் தடை தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியது.

வக்பு என அறிவிக்கப்பட்ட சொத்து அரசாங்கச் சொத்தா என்பதைத் தீர்மானிக்க மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் அளித்தமைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தனிப்பட்ட குடிமக்களின் உரிமைகள் குறித்து தீர்ப்பளிக்க ஆட்சியரை அனுமதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், வக்பு வாரியத்தில் மூன்று முஸ்லிம் அல்லாத உறுப்பினர்களுக்கு மேல் சேர்க்கப்படக் கூடாது.

அதேபோல் வக்பு மன்றத்தில் மொத்தம் நான்கு முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மேல் சேர்க்கப்படக்கூடாது என்ற விதிகள் இருக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்