புதுடெல்லி: வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் அரசியலமைப்பைப் பின்பற்ற முடியாவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறலாம் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் கூறியுள்ளார்.
இந்தியாவின் தனி உரிமைக் கொள்கையுடன் வாட்ஸ்அப், மெட்டா போன்ற நிறுவனங்கள் விளையாட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப், மெட்டா நிறுவனங்கள் பயனர்களின் தரவை விளம்பர நோக்கத்துக்காகப் பகிர்ந்துகொள்ள அனுமதி வழங்குவது குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி, அந்நிறுவனங்கள் குறித்து கடுமையாக விமர்சித்ததுடன், குடிமக்களின் தனியுரிமை சமரசம் செய்யப்படுவதை அறவே அனுமதிக்க முடியாது என்றார்.
“வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் வாங்கியுள்ளது. நாளை ஃபேஸ்புக்கை வேறு ஒருவர் வாங்குவார். அப்போது பயனர்களின் தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படும்.
“இதன்மூலம் இந்த நாட்டில் தனியுரிமைக் கொள்கைகளுடன் விளையாட முடியாது. இந்தியாவின் அரசியலமைப்பை அவமதிக்காதீர்கள்,” என்றார் தலைமை நீதிபதி சூர்யகாந்த்.

