உத்தரப் பிரதேசம்: உத்தரப் பிரதேச மாநிலத்தில் அறுவை சிகிச்சை மூலம் தவறான சிறுநீரகம் நீக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
2012ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி, 56 வயதுப் பெண் வயிற்றுவலிக்காக மருத்துவரைக் காணச் சென்றார். அங்குப் பெண்ணின் வலது சிறுநீரகத்தில் கோளாறு இருப்பதாகக் கூறிய மருத்துவர், அறுவை சிகிச்சை மூலம் அதை அகற்றவேண்டும் என்றார்.
அதே ஆண்டு மே 6ஆம் தேதி அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுநீரகச் சுத்திகரிப்புக்குச் செல்லும்படி பெண்ணிடம் கூறப்பட்டது. இருப்பினும், வயிற்றில் உள்ள பிரச்சினைகள் தொடர்ந்ததால் மருத்துவரை அந்தப் பெண் நாடினார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் பெண்ணின் வலது சிறுநீரகத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்றும் அவரின் இடது சிறுநீரகம்தான் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தெரியவந்தது.
உடல்நலக் குறைவால் அவதியுற்ற பெண் கிட்டத்தட்ட ஈராண்டுகள் கழித்து உயிரிழந்தார். பெண்ணுக்கு நடைபெற்ற தவறான அறுவை சிகிச்சைக் கண்டித்த அவரது குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
தம்மீது சுமத்தப்பட்ட வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மருத்துவர் எதிர்த்து வாதாடினார். அந்த விவகாரம் குறித்து உத்தரப் பிரதேச மருத்துவச் சங்கத்துக்கும் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவரின் கவனக்குறைவாலும் அலட்சியத்தாலும் தவறான சிறுநீரகம் நீக்கப்பட்டது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதையடுத்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்படி உத்தரவிடப்பட்டது.

