கோவையைச் சேர்ந்த தொழிலதிபரிடம் மோசடி; சாமியார் கைது

1 mins read
89270836-0159-4136-9aea-07f5b60f892c
சாமியாரைக் கைது செய்து காவல்துறை விசாரித்து வருகிறது. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

கோவை: கோவை பீளமேட்டைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான கமலேஸ்வரனுக்கு, 55, சுனில் தாஸ், 63, என்ற சாமியாருடன் அறிமுகம் ஏற்பட்டது.

கேரள மாநிலம் முத்துலமாட போஸ்ட் கம்பரத்து சாலா பகுதியைச் சேர்ந்த அந்தச் சாமியார், சினேகம் சாரிட்டபுள் டிரஸ்ட் என்ற அறநிறுவனத்தை நடத்தி வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்பு கமலேஸ்வரனிடம் தனது சாரிட்டபுள் டிரஸ்ட்டுக்கு ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.17 ஆயிரம் கோடி வந்திருப்பதாகவும் ரூ.3 கோடி கடன் கொடுத்தால் அதனை வாங்கி பணத்தை திருப்பித் தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏற்ப ரிசர்வ் வங்கியில் இருந்து வந்ததாகச் சொல்லி ஒரு கடிதத்தை அவர் காட்டியிருக்கிறார். அந்தக் கடிதத்தை அவரே போலியாக தயார் செய்ததாக நம்பப்படுகிறது.

இரை உண்மை என நம்பி உதவி செய்ய முன்வந்த கமலேஸ்வரன் ரூ.1 கோடியே 56 லட்சத்து 85 ஆயிரத்தை வங்கி மூலமும், ரூ. 1 கோடியே 43 லட்சத்து 15 ஆயிரத்தை ரொக்கமாகவும் கொடுத்துள்ளார்.

அதன் பிறகு பல மாதங்களான பிறகும் சுனில் தாஸ் பணத்தைத் திருப்பித் தரவில்லை.

இதுகுறித்து மாநகரக் குற்றப்பிரிவில் கமலேஸ்வரன் புகார் அளித்தார்.

இதையடுத்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் சுனில் தாஸ் மோசடிப் பேர்வழி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மதுரையில் பதுங்கி இருந்த சுனில் தாசைக் காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்