புதுடெல்லி: ஐஎன்எஸ் தமால் என்ற புதிய போர்க்கப்பல் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டது.
ரஷ்யாவின் கலினின்கிரட் பகுதியில் உள்ள யாந்தர் கப்பல் கட்டும் தளத்தில் நடைபெற்ற விழாவில் இந்த இணைப்பு நடைபெற்றது.
இந்திய கடற்படை பயன்பாட்டுக்காக போர்க்கப்பல்கள் உள்நாட்டிலும், ரஷ்யாவிலும் தயாரிக்கப்படுகின்றன.
எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத துஷில் ரக போர்க்கப்பல்களை ரஷ்யாவில் தயாரிக்க இந்திய பாதுகாப்புத்துறை அனுமதி கொடுத்தது. இதில் பிரம்மோஸ் ஏவுகணைகள் உட்பட 26 விழுக்காடு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ரஷ்யாவின் கலினின்கிரட் பகுதியில் உள்ள யாந்தர் கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல் இந்திய கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதையடுத்து இந்தப் போர்க்கப்பலை இந்தியக் கடற்படையில் இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்திய கடற்படையின் மேற்கு மண்டல தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் சஞ்சய் ஜஸ்ஜித் முன்னிலையில் ஐஎன்எஸ் தமால் கடற்படையில் இணைந்தது.
இந்த நிகழ்ச்சியில் இந்தியப் பாதுகாப்புத்துறை, கடற்படை மற்றும் ரஷ்ய கடற்படை அதிகாரிகள் பங்கேற்றனர்.
தொடர்புடைய செய்திகள்
புராஜெக்ட் 1135.6 திட்டத்தின் கீழ், எதிரி நாட்டு ரேடாரில் சிக்காத வகையில் தயாரிக்கப்பட்ட எட்டுப் போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் ஆகும். துஷில் ரக கப்பலில் இது 2வது கப்பல். முதல் துஷில் ரக கப்பல் ஐஎன்எஸ் துஷில் என்ற பெயரில் கடந்த ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி கடற்படையில் இணைக்கப்பட்டது.
இத்திட்டத்தின் கீழ் ஏற்கெனவே தயாரிக்கப்பட்ட 7 போர்க்கப்பல்களும் கடற்படையின் மேற்கு மண்டலத்தில் இணைக்கப்பட்டது. ஐஎன்எஸ் துஷில் போர்க்கப்பல் கேப்டன் ஸ்ரீதர் டாடா தலைமையில் இயங்கும்.
“கடந்த 65 ஆண்டுகளில் இந்தியக் கடற்படைக்கு ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 51வது போர்க்கப்பல் ஐஎன்எஸ் தமால் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் இணைப்பு, இந்திய கடற்சார் பாதுகாப்பு மற்றும் இந்தியா - ரஷ்யா இடையிலான ஒத்துழைப்பில் மிக முக்கியமானது,” என்று சஞ்சய் ஜஸ்ஜித் நிகழ்ச்சியில் தெரிவித்தார்.

