அடுத்த ஆண்டு வரும் சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக அரசியல் சூடு பிடிக்கும் வேளையில், ஆளும் திமுகவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி, துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் போன்றோர் அடுத்தடுத்து வழக்குகளில் சிக்கி வருகின்றனர். இவர்களுக்கு எதிரான வழக்குகளில் நீதிமன்றங்கள் தீவிரம் காட்டுகின்றன.
இவர்கள் தொடர் விசாரணைக்கு ஆளாகி தண்டனையும் கிடைக்கலாம். இதில், மிகவும் அவசரமாக எடுக்க வேண்டிய நடவடிக்கையாக இரண்டு பேரின் விவகாரங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்பு வந்துள்ளன. அதில் முதலாவதாக, உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி வழக்கு. இவர் ஏற்கனவே ஜாமீனில் வெளிவந்து அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
இதைச் சுட்டிக் காட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அமைச்சர் பதவி வேண்டுமா, பிணை வேண்டுமா என்று கேட்டு நெருக்குதல் தந்துள்ளனர். இந்த விவகாரத்தில் வரும் திங்கட்கிழமைக்குள் முடிவைத் தெரிவிக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதேபோல் அமைச்சர் பொன்முடி பிரச்சினையிலும் ஆலோசனை நடத்திய முதலமைச்சர் மு க ஸ்டாலின், அமைச்சர் பொன்முடியிடம் மூத்த அமைச்சர் ஒருவரை அனுப்பி பொன்முடியை நீங்களாகப் பதவி விலகி விடுங்கள் என அறிவுறுத்தியுள்ளார். இதைக் கேட்டதும் அதிர்ந்து போன பொன்முடி சில கேள்விகளைப் பதிலுக்கு எழுப்பியுள்ளதாக நம்பப்படுகிறது.
இந்நிலையில், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரிடம் உள்ள பொறுப்புகள் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முத்துசாமி, தங்கம் தென்னரசு ஆகியோருக்கு பகிர்ந்தளிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
அப்படி இல்லாவிடில் பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோர் சார்ந்த மாவட்டங்களிலிருந்து எம்எல்ஏ ஒருவரை புதிதாக அமைச்சரவைக்கு கொண்டு வரலாம் என்றும் கூறப்படுகிறது.