புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) சந்தித்துப் பேசினார்.
நான்கு நாள் பயணமாக புதுடெல்லி சென்றுள்ள திரு ரவி, மோடியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்துப் பேசினார்.
அடுத்தாண்டு ஜனவரி 6ஆம் தேதி தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் பிரதமருடனான தமிழக ஆளுநரின் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது என்றும் தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே நிலுவையில் உள்ள பல்வேறு அம்சங்கள் குறித்து ஆளுநர் எடுத்துரைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட மத்திய அமைச்சர்களையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க வாய்ப்பு உள்ளது என்றும் அறியப்படுகிறது.