சென்னை: இந்தியாவில் முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
முதலீட்டுக்கு உகந்த மாநிலங்களைத் தரவரிசைப்படுத்தி நிதி ஆயோக் தலைவர் அசோக்குமார் லகிரி பட்டியலை வெளியிட்டார்.
அதில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் 56.6 புள்ளிகளுடன் குஜராத் முதலிடத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் 53.7 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. 53.3 புள்ளிகளுடன் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது. ஒடிசா 4வது, மத்தியப்பிரதேசம் 5வது, ஆந்திரா 6வது இடங்களில் உள்ளன.
மலைப்பகுதிகள், வடகிழக்கு மாநிலங்களுக்கான பட்டியலில் உத்தராகண்ட் முதலிடத்தில் உள்ளது. அசாம், இமாச்சல பிரதேசம் அடுத்தடுத்த இடங்களில் வந்துள்ளன. யூனியன் பிரதேசப் பிரிவில் கோவா, டெல்லி, சண்டிகர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தொழில் முதலீடுகளை ஈர்த்து, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே கடும்போட்டி நிலவுகிறது.
தென்னிந்தியாவில் தமிழ்நாடு, ஆந்திரா இடையே முதலீடுகளை ஈர்ப்பதில் கடும்போட்டி நிலவுகிறது. அண்மைக்காலமாக தொழில் முதலீடுகளில் ஈர்ப்பதில் தமிழ்நாட்டை ஆந்திரா விஞ்சி வருவதாகவும், தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய பல தொழிற்சாலைகள் ஆந்திரா பக்கம் சென்று இருப்பதாகவும் அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.
ஏழ்மையான மாநிலங்களில் பீகார் முதலிடத்திலும் உத்தரப் பிரதேசம் 3வது இடத்திலும் உள்ளன.
ஒரு மாநிலத்தின் உள்கட்டமைப்பு, வணிகச் சூழல், வளங்கள், அரசுகளின் கொள்கை, எளிமையான ஒழுங்குமுறை, நிதிவளம் உள்ளிட்ட எட்டு அம்சங்களின் அடிப்படையில் நிதி ஆயோக் இப்பட்டியலை வெளியிட்டுள்ளது.

