லக்னோ: மாணவர்களுக்கு இணையம் வழியாக வகுப்பு நடத்திக்கொண்டிருந்த தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடந்த திங்கட்கிழமை நிகழ்ந்தது.
அந்தக் கொலைச் சம்பவம் ஆசிரியரின் கைப்பேசியில் காணொளியாகப் பதிவாகியிருந்தது. அக்காணொளியின் அடிப்படையில் சந்தேகப் பேர்வழிகளைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ண குமார் யாதவ், 35, என்ற அந்த ஆசிரியர் ‘ஸூம்’ செயலி வழியாக பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது உள்ளூர் இளையர்கள் இருவர் அவரது வீட்டிற்குள் நுழைந்து அவரை கழுத்தை நெரித்துக் கொன்றனர். ஆசிரியரின் கைப்பேசியை காவல்துறையினர் ஆராய்ந்ததில் மாணவர் அமர்வைப் பதிவுசெய்யும் ‘ஸூம்’ சந்திப்புக் காட்சிகள் அதில் இருந்தன. அக்காணொளியில் கொலைச் சம்பவமும் பதிவாகியிருந்தது.
“கிருஷ்ணாவைக் கொலை செய்த இரு சந்தேகப் பேர்வழிகளில் ஒருவர், அவரின் சகோதரியைத் தான் பின்தொடர்ந்ததை ஒப்புக்கொண்டார். இதையறிந்த கிருஷ்ணா, காவல்துறையில் புகார் செய்வேன் என்று அவரை மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆடவர், தம் உதவியாளரின் துணையுடன் கிருஷ்ணாவைக் கொலை செய்தார்,” என்று காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கொலைகாரர்கள் தாக்கியபோது கிருஷ்ணாவின் கைப்பேசி தரையில் விழுந்ததாகவும் ஆயினும் அவரது கைப்பேசியில் அங்கு நடந்தவை அனைத்தும் பதிவானதாகவும் கூறப்பட்டது.