பாட்னா: வரவிருக்கும் பீகார் மாநிலத்திற்கான சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார் தேஜ் பிரதாப் யாதவ்.
ராஷ்டிரிய ஜனதா தளத்தின் (ஆர்ஜேடி) நிறுவனரும் அதன் தலைவருமான லாலு பிரசாத் யாதவின் மகனாகிய தேஜ் பிரதாப், வைஷாலி மாவட்டத்தில் உள்ள மஹுவா தொகுதியிலிருந்து தேர்தலைச் சந்திக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவரைக் கடந்த மே மாதம் 25ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கி உத்தரவிட்டார் லாலு பிரசாத்.
அப்போது அறிக்கை வெளியிட்ட லாலு, தேஜ் பிரதாப் யாதவின் நடவடிக்கைகள், நடத்தை ஆகியவை குடும்பத்தின் விழுமியங்களுக்கு ஏற்ப இல்லையென்றார். மேலும் அதன் தொடர்பில் நிலவும் சூழலைக் கவனத்தில் கொண்டு அவரைக் கட்சியிலிருந்தும் குடும்பத்திலிருந்தும் நீக்குவதாகவும் லாலு தெரிவித்திருந்தார்.
இதற்கிடையே, தேர்தலில் எந்தக் கட்சியிலும் இணையாமல் தனித்து போட்டியிடுவது குறித்து செய்தியாளர்களிடம் பேசினார் தேஜ்.
‘‘இந்த முறை, நான் மஹுவா சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகத் தேர்தலில் போட்டியிடுவேன். எனக்கு மக்களின் பேராதரவு உள்ளது” என நம்பிக்கை தெரிவித்தார் அவர்.