மும்பை: ரிலையன்ஸ் தொழில் நிறுவனங்களின் தலைவர் முகேஷ் அம்பானிக்குக் கொலை மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பியவர் அடையாளம் காணப்பட்டு கைதுசெய்யப்பட்டவர்.
தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் ஆர் வன்பர்தி, 19, என்ற அந்த மாணவர், பின்னர் சனிக்கிழமை மும்பைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அங்கு அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை இம்மாதம் 8ஆம் தேதி காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
“வன்பர்தி ஒரு கல்லூரி மாணவர். அக்டோபர் 27ஆம் தேதியிலிருந்து நவம்பர் 1ஆம் தேதிவரை பணம் தராவிடில் கொன்றுவிடுவதாக அவர் பலமுறை முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் மின்னஞ்சல்களை அனுப்பினார். அதற்கான காரணம் குறித்து அவரிடம் விசாரித்து வருகிறோம்,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் சொன்னார்.
ஒரே மின்னஞ்சல் முகவரியிலிருந்தே வன்பர்தி அந்த மின்னஞ்சல்களை அனுப்பியதாகக் கூறப்பட்டது.
முதலில் 20 கோடி ரூபாய் கேட்ட அவர், பின்னர் அதனை 40 கோடியாக உயர்த்தினார்.
பிறகு, தமது முன்னைய மின்னஞ்சல்களைப் புறக்கணித்தால் விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று எச்சரித்து, இம்முறை ரூ.400 கோடி தரவேண்டும் எனக் கேட்டு, மீண்டும் அவர் மின்னஞ்சல்களை அனுப்பினார்.
அதனைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானியின் பாதுகாப்புப் பிரிவுத் தலைவர் தேவேந்திர முன்சிராம் காவல்துறையில் புகாரளித்தார்.