புதுடெல்லி: இஸ்ரேல் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.
அந்த உரையில், “பயங்கரவாதத்தை யாராலும் ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது,” என்று கூறியுள்ளார்.
இஸ்ரேலுக்கு இரண்டு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடியை டெல் அவிவ் விமான நிலையத்தில் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உற்சாகமாக வரவேற்றார். அங்கு இரு நாட்டு தேசிய கீதங்களையும் ராணுவ இசைக்குழுவினர் இசைத்தனர். பின்னர், இருவரும் நாடாளுமன்றத்துக்குச் சென்றனர். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் இந்தியப் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
பிரதமர் நெட்டன்யாகு பேசுகையில், ‘‘இஸ்ரேலின் சிறந்த நட்பு நாடு இந்தியா. இந்தியாவும் இஸ்ரேலும் சகோதர நாடுகள். பிரதமர் மோடி இஸ்ரேல் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும் இஸ்ரேலும் தங்கள் உறவை வலுப்படுத்தி வருகின்றன.
“மோடியைக் கட்டிப்பிடித்து வரவேற்பது உண்மையிலேயே மிகச் சிறப்பானது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஒத்துழைப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. புரிதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் மோடி உள்ளார். இந்தியாவும் இஸ்ரேலும் பல நல்ல விஷயங்களை பகிர்ந்துகொள்கின்றன. யூதர்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்தியா ஒரு சக்திவாய்ந்த நாடு,” என்றார்.
மோடி பேசுகையில், “அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உங்கள் வேதனையை உணர்கிறேன். மும்பை பயங்கரவாதத் தாக்குதலும், இஸ்ரேலில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதலும் ஒன்றுதான். பொதுமக்களைக் கொல்வதை ஒருபோதும் யாராலும் நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதம் அமைதியைக் கெடுக்கிறது.
“சமூகத்தை அழிப்பதுதான் பயங்கரவாதத்தின் நோக்கம். பயங்கரவாதத்தில் இரட்டை நிலை இருக்க முடியாது. பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா உள்ளது. இப்பகுதியில் நிலையான அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புகிறது. பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டிய நேரம் வந்துள்ளது. அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது.
இந்தியாவில் யூதர்கள் அச்சமின்றி வசிக்கின்றனர். யூதர்களின் தாய்நாடாக இந்தியா உள்ளது. நமது உறவு ரத்தம் மற்றும் தியாகத்தால் எழுதப்பட்டுள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியாவும் இஸ்ரேலும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பிரதமர் மோடி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவின் வான்வெளிப் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ‘சுதர்சனச் சக்கரம்’ ஆயுதத் தயாரிப்பில் ஒருங்கிணைந்து செயல்படுவது, இஸ்ரேலின் வான் பாதுகாப்புக் கருவியான அயர்ன்டோம் ஏவுகணைத் தொழில்நுட்பத்தை அளிப்பது குறித்தும் இரு நாட்டு பிரதமர்கள் ஆலோசனை நடத்தினர்.
இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். பின்னர் பிரதமர் மோடிக்கு, அங்கு வாழும் இந்தியர்கள் ஜெருசலேமில் உள்ள கிங் டேவிட் ஹோட்டலில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

