சென்னை: பீகார் மாநிலத்தைச் சேர்ந்த இளையர்களைப் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுத்தும் நோக்கத்துடன், அவர்களைப் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மூளைச்சலவை செய்து வருவதாக தேசியப் புலனாய்வு முகவை (என்ஐஏ) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய எல்லையில் பயங்கரவாதிகளின் பல்வேறு ஊடுருவல் முயற்சிகளையும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து முறியடித்து வருகின்றனர். அதையும் மீறி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளனர். அவர்களைக் களையெடுக்கும் நடவடிக்கையை என்ஐஏ மேற்கொண்டுள்ளது.
அந்த வகையில், தமிழகத்தின் செங்கல்பட்டு மாவட்டத்தில் பதுங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு முக்கியத் தகவல்கள் தெரிய வந்தன.
இதயைடுத்து, பீகார் உட்பட ஐந்து மாநிலங்களில் உள்ள 21 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அப்போது கைப்பேசிகள், மடிக்கணினி, மின்னிலக்க ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம்தான் பீகார் மாநில இளையர்கள், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளால் மனமாற்றம் செய்யப்படுவது தெரியவந்துள்ளது.
பீகார் இளையர்கள் பலர், சிரியாவில் செயல்பட்டு வரும் அல் காய்தா, ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருப்பது உறுதியாகி உள்ளது.
மேலும், நேப்பாளம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பும் பீகார் இளையர்களைத் தங்கள் அமைப்பில் சேர்த்து வருவதாக என்ஐஏ அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு பயிற்சி அளிக்கப்படும் இளையர்கள், பின்னர் இந்தியாவின் மற்ற அனைத்துப் பகுதிகளுக்கும் கூலித் தொழிலாளர்கள்போல் அனுப்பப்படுகின்றனர். அவர்கள் மூலம் பேரளவிலான தாக்குதல் சம்பவங்கள் நடக்கக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளதாக தமிழக ஊடகத் தகவல் தெரிவிக்கிறது.