பானாஜி: இந்தியாவில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கண்டுபிடிக்கப்படும்போது அவர்கள் வேட்டையாடப்படுவார்கள் என்று துணை அதிபர் ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு இன்னும் தேவை இருப்பதால் அது தொடர வேண்டும் என்று கோவா ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.
நம்பிக்கையும் துணிச்சலும் மிக்க நாடாக இந்தியா இப்போது மாறிவிட்டது என்றும் தொல்லை கொடுக்கும் அண்டை நாட்டிற்கு மட்டும் அல்லாமல், உலக நாடுகளுக்கும் ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் மூலம் முக்கியமான செய்தி அனுப்பப்பட்டுள்ளது என்றும் துணை அதிபர் கூறினார்.
“பிரதமர் மோடி அனுப்பிய செய்தியில் பயங்கரவாதத்தை இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது. பயங்கரவாதிகள் தண்டிக்கப்படுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது. இது பாராட்டப்பட வேண்டிய கொள்கை.
“ஆப்பரேஷன் சிந்தூரின் போது, துல்லியமாக தாக்குதல் நடத்திய இந்திய ஆயுதப்படையினரின் திறமையைப் பார்த்த அனைத்துலகச் சமுதாயம் அங்கீகாரம் அளித்துள்ளது. பாகிஸ்தானில் சடலங்கள் எடுத்துச் செல்லப்படுவதால், ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் விளைவுகள் குறித்து யாரும் ஆதாரம் கேட்கவில்லை,” என்றார் துணை அதிபர் ஜக்தீப் தன்கர்.

