புதுடெல்லி: முன்னாள் ஐக்கிய நாட்டுச் சபை அரசதந்திரியும் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான சஷி தரூர், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டும் வகையில் கருத்து வெளியிட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது, காங்கிரசுக்கு நெருடலாக அமைந்துள்ளது என இந்துஸ்தான் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
ரஷ்யா-உக்ரேன் போரின் தொடர்பில் இந்தியாவின் அணுகுமுறையை திரு தரூர் பாராட்டிப் பேசியுள்ளார். அந்த அணுகுமுறையால்தான் நீண்டகாலத்துக்கு அமைதி நிலவும் நோக்கில் தாக்கத்தை ஏற்படுத்தும் நிலையில் இந்தியா இருக்கிறது என்று திரு தரூர் கருத்துரைத்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நாடாளுமன்ற விவாதத்தில் தாம்தான் இந்தியாவின் நிலைப்பாட்டை விமர்சித்ததாகவும் இப்போது தாமேதான் அவமானப்பட்டு நிற்பதாகவும் திரு தரூர் கூறியுள்ளார்.
“இரு வார இடைவெளியில் உக்ரேனிய அதிபர், ரஷ்ய அதிபர் இருவரையும் அணைத்துக்கொள்ளக்கூடிய பிரதமர் ஒருவர் இந்தியாவிடம் இருப்பதற்கு இந்த அணுகுமுறைதான் காரணம்,” என்று திரு தரூர் பாராட்டியிருக்கிறார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்று திரு தரூரிடம் கருத்து கேட்டதற்குப் பதிலளித்த அவர், “எனது கருத்துகளில் பதில் உள்ளது. வேறு எதுவும் சொல்வதற்கு இல்லை,” என்று விளக்கினார்.
இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் இதுவரை அமைதி காத்துவருகிறது.